கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (2)
2019ல் கோவில் கட்டுகிறோம் என்ற செய்தி: ராசிபுரம் அருகேயுள்ள குச்சிகாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பட்டியிலின மக்கள் 10 பேர், தங்களுடைய சொந்த நிலத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்[1]. கோயில் பணிக்காக நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது[2]. இதில் தி.மு.க மற்றும் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்[3]. இதுபற்றி அப்பகுதி மக்களிடம் பேசியபோது[4], ‘2008ல் எங்கள் இனமக்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் கருணாநிதி. பல்வேறு உதவிகளை எங்கள் மக்களுக்கு செய்த அவருக்கு நன்றி தெரிவிக்கவும், அவரை போற்றுவதற்கும் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டுகிறோம். அண்ணா அறிவாலயம், கலைஞர் அறிவாலயம் போல் இந்தக் கோயில், மக்களிடைய பகுத்தறிவை எடுத்துச்செல்ல, உதவ வேண்டிய பணியை சிறப்பாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு கருணாநிதி செய்த உதவிகள் காலம் கடந்து நிற்கும். அவரது சாதனைகளைச் சொல்வதற்கு, நாங்கள் ஒரு நினைவாலயம் போல் கட்டுவது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்,” என்றனர்[5]. ரூ.30 லட்சம் மதிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கட்டப்படும் கோயிலில் கருணாநிதியின் உருவச்சிலை, பூங்கா மற்றும் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக அருந்ததியர் முன்னேற்றப் பேரவை அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்[6].
திமுக தலைவர் கொடுத்த விளக்கம்: இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதியான கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதை பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் குச்சிக்காடு கிராமத்துக்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வன் நேரில் வருகை தந்தார். அங்கே கருணாநிதிக்குக் கோயில் கட்டப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தார்[7]. இதன்பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “குச்சிக்காடு கிராம மக்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்டவில்லை. இங்கே பகுத்தறிவாலயம்தான் எழுப்பப்படுகிறது. நினைவிடத்தில் இருப்பது போலவே கருணாநிதியின் சிலை இருக்கும். மேலும் போட்டித் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் இணைய வசதியும்கூடிய நூலகமும் அமைக்கப்பட உள்ளது. கணினி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது,” என்று காந்திச்செல்வன் தெரிவித்தார்[8]. 2019ல் இவ்வாறு எல்லாம் சப்பைக் கட்டினாலும், 2022 வரை ஒன்றும் நடக்கவில்லை போலும். ஏனெனில், 2022ல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
2022ல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது குச்சிகாடு என்ற கிராமம். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது[9]. கலைஞர் பகுத்தறிவு ஆலயம் என்று பெயரிடப்பட்ட இந்த கோவிலுக்கு பேரரூராட்சி துணை தலைவர் நல்லதம்பி என்பவர் தன்னுடைய நிலத்தை இலவசமாக கொடுத்து உள்ளார்[10]. மேலும், இவ்வூரை சேர்ந்த அரசு ஊழியர்கள் கலைஞர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டள்ளனர்[11]. இந்த நிலையில் பூமிபூஜை செய்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கோவில் கட்டும் பணி பாதியிலேயே நின்று உள்ளது[12]. குச்சிகாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோவில் கட்டும் பணியில் ஆர்வம் காட்டிய போதிலும் மேற்கொண்டு ஆதரவு கிடைக்காததால் கோவில் பணி பாதியிலேயே நின்றுள்ளது. தற்போது பாதியில் நிற்கும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இவ்வூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிறகு, 2019-2022 காலகட்டத்தில் என்ன நடந்தது, கோவில் கட்டமுடியாமல் யார் தடுத்தது, அதற்கு யார் காரணம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.
2010ல் கருணாநிதிக்கு கோவில் கட்ட திட்டம் போட்ட ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி: முதல்வர் கருணாநிதி பெயரில் செம்மொழி விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவரது பெயரில் வீட்டு வசதித் திட்டம், உயிர் காப்பீட்டுத்திட்டம் ஆகியவை உள்ளன. முதல்வர் பெயரில் டிவி சானலும் கூட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் பெயரில் ஒரு கோவில் வரவுள்ளது வேலூரில். வேலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருக்கும் ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திதான் இந்தக் கோவிலை கட்ட முனைந்துள்ளார்[13]. முதல்வர் கருணாநிதியின் ஏழை மக்கள் நலத் திட்டங்களால் கவரப்பட்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்[14]. இந்தக் கோவிலுக்கு கலைஞர் திருக்கோவில் என அவர் பெயரிட்டுள்ளார். குடியாத்தம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சாமிரெட்டிப்பள்ளி கிராமத்தில் இந்தக் கோவில் வருகிறது.ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக்கோவில் உருவாகிறது. கிரானைட்டால் ஆன முதல்வர் கருணாநிதியின் சிலை இங்கு வைக்கப்படுகிறது. வெளியில் உள்ள தூண்களில் மு.க.ஸ்லாடின், துரைமுருகன், மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தியின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கிருஷ்ணூ்ர்த்தி கூறுகையில், முதல்வர் கருணாநிதி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எனது கிராமத்தில் மட்டும் 13 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரை தாங்கள் கடவுள் போல கருதுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்தே எனக்கு கோவில் கட்டும் ஐடியா வந்தது என்றார்.
2010 அக்கோவில் இடிக்கப் பட்டது: அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடித்தனராம்: இந்நிலையில், குடியாத்தத்தைச் சேர்ந்த வருவாய்த் துறையினர் 02-07-2010 அன்று காலை 10 மணிக்கு கோவில் இருந்த இடத்துக்கு வந்து மார்பளவு இருந்த கருணாநிதியின் சிலையை அகற்றினர்[15]. மேலும், கோவிலின் முகப்புத் தோற்றம் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றினர்[16]. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்து காரணம் கேட்ட போது, “அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்’ என, கூறினர்[17]. இங்குதான் விவகாரம் இருக்கும் போலிருக்கிறது. சமீபத்தில், “அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்”, என்று பெரும்பாலும் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன[18]. இதை திசைத் திருப்ப, ஒருவேளை கருணாநிதி, இப்படியொரு யுக்தியைக் கையாண்டாரா என்று தெரியவில்லை. நாளைக்கு சொல்வார், “பார் எனக்குக் கட்டிய கோவிலையே, நான் இடிக்க ஆணையிட்டு விட்டேன்”, என்று பீழ்த்திக் கொள்ளலாம்.
© வேதபிரகாஷ்
20-10-2022.
[1] விகடன், `3% இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் அவர்!’- கருணாநிதிக்கு கோயில் கட்டும் கிராம மக்கள், ர.ரகுபதி, Published:26 Aug 2019 6 PMUpdated:26 Aug 2019 6 PM
[2] https://www.vikatan.com/news/tamilnadu/rasipuram-village-people-to-construct-temple-for-karunanidhi
[3] தமிழ்.சமயம், ராசிபுரம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டுவிழா!, Samayam TamilUpdated: 26 Aug 2019, 12:09 pm
[4] https://tamil.samayam.com/latest-news/state-news/villagers-to-build-temple-for-dmk-leader-karunanidhi-near-rasipuram/articleshow/70837912.cms
[5] தமிழ்.இந்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில்: ராசிபுரம் அருகே அடிக்கல் நாட்டு விழா, செய்திப்பிரிவு, Published : 26 Aug 2019 07:59 AM’ Last Updated : 26 Aug 2019 07:59 AM
[6] https://www.hindutamil.in/news/tamilnadu/512919-temple-for-karunanidhi.html
[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கருணாநிதிக்குக் கட்டுவது பகுத்தறிவாலயமாம்… கோயில் இல்லை என திமுக மா.செ. அறிவிப்பு, Asianet Tamil, Rasipuram, First Published Aug 31, 2019, 8:53 AM IST , Last Updated Sep 6, 2019, 10:54 PM IST.
[8] https://tamil.asianetnews.com/politics/temple-of-karunanidhi-bulid-in-rasipuram-px303z
[9] தினத்தந்தி, முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதிக்கு கோவில் – வியப்பில் ஆழ்த்திய ஊர் மக்கள்…! , ஆகஸ்ட் 7, 12:52 pm (Updated: ஆகஸ்ட் 7, 12:52 pm).
[10] https://www.dailythanthi.com/News/State/former-chief-minister-karunanidhis-temple-amazed-town-people-763645
[11] தமிழ்.வெப்.துனியா, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்! – எந்த ஊரில் தெரியுமா?, Written By Prasanth Karthick, Last Modified, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (13:37 IST).
[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/peoples-build-a-temple-for-former-cm-karunanithi-122080700031_1.html
[13] தமிழ்.ஒன்.இந்தியா, கருணாநிதிக்கு கோவில் கட்டும் வேலூர் திமுக கவுன்சிலர், By Sutha Published: Thursday, July 1, 2010, 14:39 [IST]
[14] https://tamil.oneindia.com/news/2010/07/01/dmk-councillor-karunanidhi-temple.html?story=2
[15] தினமலர், முதல்வருக்கு கட்டிய கோவில் அகற்றம், Added : ஜூலை 03, 2010 01:22 |
[16] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=31199
[17] வேதபிரகாஷ், கருணாநிதிக்கு கோயில் கட்டியுள்ள கவுன்சிலர், 01-07-2010.
[18]https://rationalisterrorism.wordpress.com/2010/07/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/